முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » அர்த்தமுள்ள இந்துமதம் » மனிதாபிமானம்
அர்த்தமுள்ள இந்துமதம் - மனிதாபிமானம்
`சக்தியும் சிவனும், அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் பாதியாக இருக்கிறார்களே, அவர்களது மீதிப் பாதி எங்கே போயிற்று’ என்று விநாயகப் பெருமானை யாரோ கேட்டார்களாம்.
அதற்கு விநாயகர் `சிவத்தின் பாதிதான் உலகத்தில் ஆண்களாகவும், சக்தியின் பாதிதான் உலகத்தில் பெண்களாகவும் அவதரிக்கிறார்கள்’ என்றாராம்.
இப்படி ஒரு கதை நான் படித்தேன்.
`தெய்வம் மனுஷ ரூபயனா’ என்பது வடமொழி சுலோகம்.
ஒவ்வொரு மனிதனும் பரமனின் அணுவில் தோன்றியவனே!
ஒவ்வொரு பெண்ணும் சக்தியின் அணுவில் பிறந்தவளே!
அதனாலேதான், பிறக்கும்போது குழந்தை வஞ்சகம், சூது, கள்ளம், கபடு அறியாததாக இருக்கிறது.
தெய்வீக அணுவின் அடையாளச் சின்னமே குழந்தை.
ஒவ்வொரு குழந்தையும் தெய்வமாகவே அவதரிக்கிறது!
பிறகு ஏன், சில குழந்தைகள் திருடர்களாகவும், சில குழந்தைகள் அறிஞர்களாகவும், வளர்கின்றன.
இறைவன் உலகத்தில் உணர்ச்சிக்களத்தை உருவாக்க விரும்புகிறான்; உலகத்தை இயக்க விரும்புகிறான்.
எல்லாக் குழந்தைகளும் பிறந்தபோது இருந்தது போலவே வளரும்போதும் இருந்துவிட்டால், உலக வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமற் போய்விடும்.
மாறுபட்ட உணர்ச்சி இல்லை என்றால், மோதல்கள் இல்லாமற் போய்விடும்.
மோதல்கள் இல்லை என்றால், உண்மை என்ற ஒன்று
அறியப்படாமற் போய்விடும்.
`நிழலருமை வெய்யிலிலே நின்றறிமின்’ என்றார்கள்.
நிழலை உணர வெயில் தேவை.
மழையை உணர வறட்சி தேவை.
மனிதாபிமானத்தை உணர மிருகத்தனம் தேவை.
தெய்வீகத்தை உணர மனிதர்கள் தேவை.
உமையும் மகேஸ்வரனும் படைத்த ஆண் பெண்கள் மூன்று வகையாக உருப்பெறுகிறார்கள்.
மிருகம்;
மனிதன்;
தெய்வம்.
கேவலமான உணர்வுக்கும், உயர்ந்த உணர்வுக்கும் நடுவே சராசரி மனிதன் நிற்கிறான்.
மிருகத்தைப் பார்க்கும்போது, மனிதாபிமானத்தின் மீது பற்று வருகிறது.
மனிதனைப் பார்க்கும்போது, தெய்வம் தேவைப்படுகிறது.
எல்லோருமே தெய்வங்களாகி விட்டால், தெய்வத் தத்துவம் செத்துப்போகும்.
எல்லோருமே மிருகங்களாகி விட்டால், தெய்வமே பயனற்றுப் போகும்.
நடுவே நிற்கும் மனிதனே, உலக இயக்கத்தின் பிதாவாகிறான்.
அவனைப் பார்த்தே தெய்வங்களும், மிருகங்களும் உணரப்படுகின்றன.
அதனால்தான் மிருகத்திற்கும் தெய்வத்திற்கும் நடுவே உள்ள மனிதனிடம் ஒரு அபிமானத்தை வளர்க்க இந்துமதம் முயற்சி எடுத்தது.
இதன் பெயரே மனிதாபிமானம்!
இதிகாசங்களில் வருகிறவர்கள் மனிதர்கள் தான். ராமன் என்ற மனிதன் தன் நடத்தையால் தெய்வமானான்.
இராவணன் என்ற மனிதன் தன் நடத்தையால் மிருகமானான்.
பாண்டவர்கள் தெய்வமானார்கள்.
கெளரவர்கள் மிருகமானார்கள்.
மனிதனுக்கு மனிதன் அபிமானத்தை வளர்த்தால் மனிதன் உள்ளத்திற்குள்ளேயே தெய்வம் தோன்றிவிடுகிறது.
மனத்தைக் `கோயில்’ என்கிறார்கள்; அதில் அமர்த்தப்படும் தெய்வமே மனிதாபிமானம்.
ஞானிகள் வானத்திலிருக்கும் தெய்வத்தைக் காண முயலவில்லை; மனிதனுக்குள்ளே தெய்வத்தைக் காண முயன்றார்கள்.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மனிதன், தேவை, நடுவே, தெய்வம், என்ற, ஒவ்வொரு, போய்விடும், உலகத்தில் - Arththamulla Indhu Madham - அர்த்தமுள்ள இந்துமதம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்