முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பத்தாம் திருமுறை - திருமந்திரம் » ஐந்தாம் தந்திரம்
பத்தாம் திருமுறை - திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்
ஐந்தாம் தந்திரம்
1. சுத்த சைவம்
1419 |
ஊரும் உலகமும் ஓக்கப் படைக்கின்ற பேரறி வாளன் பெருமை குறித்திடின் மேருவும் மூவுல காளி யிலங்கெழுந் தாரணி நால்வகைச் சைவமு மாமே. |
1 |
1420 |
சத்தும் அசத்துஞ் சதசத்துந் தான்கண்டு சித்தும் அசித்துஞ் சேர்வுறா மேநீத்த சுத்தம் அசுத்தமுந் தோய்வுறா மேநின்று நித்தம் பரஞ்சுத்த சைவர்க்கு நேயமே. |
2 |
1421 |
கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம் முற்பத ஞான முறைமுறை நண்ணியே சொற்பத மேவித் துரிசற்று மேலான தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே. |
3 |
1422 |
வேதாந்தஞ் சுத்தம் விளங்கிய சித்தாந்த நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற காட்சியர் புதாந்த போதாந்த மாதுப் புனஞ்செய்ய நாதாந்த பூரணர் ஞானநே யத்தரே. |
4 |
2. அசுத்த சைவம்
1423 |
இணையார் திருவடி ஏத்துஞ் சீரங்கத் தினையார் இணைக்குழை யீரணை முத்திரை குணமா ரிணைக்கண்ட மாலையுங் குன்றா தணைவாஞ் சரியை கிரியையி னார்க்கே. |
1 |
1424 |
காதுப்பொ னார்ந்த கடுக்கன் இரண்டுசேர்த் தோதுந் திருமேனி யுட்கட் டிரண்டுடன் சோதனை செய்து துவாதெச மார்க்கராய் ஓதி யிருப்பார் ஒருசைவ ராகுமே. |
2 |
1425 |
கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டனர் கண்டங்கள் ஒன்பதுங் கண்டாய் அரும்பொருள் கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டமாங் கண்டங்கள் கண்டோர் கடுஞ்சுத்த சைவரே. |
3 |
1426 |
ஞானி புவியெழு நன்னூ லனைத்துடன் மோன திசையும் முழுஎண்ணெண் சித்தியும் ஏனை நிலமும் எழுதா மறையீறுங் கோனொடு தன்னையுங் காணுங் குணத்தனே. |
4 |
3. மார்க்க சைவம்
1427 |
பொன்னாற் சிவசாத னம்பூதி சாதனம் நன்மார்க்க சாதனம் மாஞான சாதனந் துன்மார்க்க சாதனந் தோன்றாத சாதனஞ் சன்மார்க்க சாதன மாஞ்சுத்த சைவர்க்கே. |
1 |
1428 |
கேடறு ஞானி கிளர்ஞான பூபதி பாடறு வேதாந்த சித்தாந்த பாகத்தின் ஊடுறு ஞானோ தயனுண்மை முத்தியோன் பாடுறு சத்தசை வப்பத்த நித்தனே. |
2 |
1429 |
ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு மோகமில் நாலேழு முப்பேத முற்றுடன் வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்மேயொன் றாக முடிந்த வருஞ்சுத்த சைவமே. |
3 |
1430 |
சுத்தம் அசுத்தந் துரியங்கள் ஓரேழுஞ் சத்தும் அசத்துந் தணந்த பராபரை உய்த்த பராபரை யுள்ளாம் பராபரை அத்தன் அருட்சத்தி யாய்எங்கு மாமே. |
4 |
1431 |
சத்தும் அசுத்துந் தணந்தவர் தானாகிச் சித்தும் அசித்துந் தெரியாச் சிவோகமாய் முத்தியுள் ஆனந்த சத்தியுள் மூழ்கினார் சித்தியு மங்கே சிறந்துள தானே. |
5 |
1432 |
தன்னைப் பரனைச் சதாசிவன் என்கின்ற மன்னைப் பதிபசு பாசத்தை மாசற்ற முன்னைப் பழமல முன்கட்டை வீட்டினை உன்னத் தகுஞ்சுத்த சைவர் உபாயமே. |
6 |
1433 |
பூரணம் தன்னிலே வைத்தற்ற வப்போதே மாரண மந்த மதித்தானந் தத்தோடு நேரென ஈராறு நீதி நெடும் போகங் காரண மாஞ்சுத்த சைவர்க்குக் காட்சியே. |
7 |
1434 |
மாறாத ஞான மதிப்பற மாயோகந் தேறாத சிந்தையைத் தேற்றிச் சிவமாக்கிப் பேறான பாவனை பேணி நெறிநிற்றல் கூறாகு ஞானி சரிதை குறிக்கிலே. |
8 |
1435 |
வேதாந்தங் கண்டோர் பிரமமித் தியாதரர் நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற யோகிகள் வேதாந்த மல்லாத சித்தாந்தங் கண்டுளோர் சாதா ரணமன்ன சைவர் உபாயமே. |
9 |
1436 |
விண்ணினைச் சென்றணு காவியன் மேகங்கள் கண்ணினைச் சென்றணு காப்பல காட்சிகள் எண்ணினைச் சென்றணு காம லெணப்படும் அண்ணலைச் சென்றணு காபசு பாசமே. |
10 |
1437 |
ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக நின்று சமய நிராகார நீங்கியே நின்று பராபரை நேயத்தைப் பாதத்தாற் சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே. |
11 |
4. கடுஞ் சுத்த சைவம்
1438 |
வேடம் கடந்து விகிர்தன்தன் பால்மேனி ஆடம் பரமின்றி ஆசாபா சம்செற்றுப் பாடொன்று பாசம் பசுத்துவம் பாழ்படச் சாடும் சிவபோ தகர்சுத்த சைவரே. |
1 |
1439 |
உடலான ஐந்தையும் ஓராறும் ஐந்து மடலான மாமாயை மற்றுள்ள நீவப் படலான கேவல பாசந் துடைத்துத் திடமாய்த் தனையுறல் சித்தாந்த மார்க்கமே. |
2 |
1440 |
சுத்தச் சிவனுரை தானத்தில் தோயாமல் முத்தர் பதப்பொருள் முத்திவித் தாமூலம் அத்தகை யான்மா அரனை அடைந்தற்றாற் சுத்த சிவமாவ ரேசுத்த சைவரே. |
3 |
1441 |
நானென்றும் தானென்றும் நாடிநான் சாரவே தானென்று நானென் றிரண்டிலாத் தற்பதந் தானென்று நானென்ற தத்துவ நல்கலால் தானென்று நானென்றுஞ் சாற்றகில் லேனே. |
4 |
1442 |
சாற்றரி தாகிய தத்துவஞ் சித்தித்தால் ஆற்றரி தாகிய ஐந்தும் அடங்கிடும் மேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய்நிற்கும் பாற்பர சாயுச்சிய மாகும் பதியே. |
5 |
5. சரியை
1443 |
நேர்ந்திடு மூல சரியை நெறியிதென் றாய்ந்திடுங் காலாங்கி கஞ்ச மலையமான் ஓர்ந்திடுங் கந்துரு கேண்மின்கள் பூதலத் தோர்ந்திடுஞ் சுத்த சைவத் துயிரதே. |
1 |
1444 |
உயிர்க்குயி ராய்நிற்றல் ஒண்ஞான பூசை உயிர்க்கொளி நோக்கல் மகாயோக பூசை உயிர்ப்பெறு மாவா கனம்புறப் பூசை செயிற்கடை நேசஞ் சிவபூசை யாமே. |
2 |
1445 |
நாடு நகரமும் நற்றிருக் கோயிலுந் தேடித் திரிந்து சிவபெரு மான்என்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே. |
3 |
1446 |
பத்தர் சரிதை படுவோர் கிரியையோர் அத்தகு தொண்டர் அருள்வேடத் தாகுவோர் சுத்த வியமாதி சாதகர் தூயோகர் சித்தர் சிவஞானஞ் சென்றெய்து வோர்களே. |
4 |
1447 |
சார்ந்தமெய்ஞ் ஞானத்தோர் தானவ னாயினோர் சேர்ந்தவெண் யோகத்தர் சித்தர் சமாதியோர் ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர் நேர்ந்த சரியையோர் நீள்நிலத் தோரே. |
5 |
1448 |
கிரியை யோகங்கள் கிளர்ஞான பூசை அரிய சிவனுரு அமரும் அரூபந் தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசை உரியன நேயத் துயர்பூசை யாமே. |
6 |
1449 |
சரியாதி நான்குந் தருஞான நான்கும் விரிவான வேதாந்த சித்தாந்த மாறும் பொருளா னதுநந்தி பொன்னகர் போந்து மருளாகு மாந்தர் வணங்கவைத் தானே. |
7 |
1450 |
சமையம் பலசுத்தித் தன்செயல் அற்றிடும் அமையும் விசேடமும் அரன்மந் திரசுத்தி சமைய நிருவாணங் கலாசுத்தி யாகும் அமைமன்னு ஞானமார்க் கம்அபிடேகமே. |
8 |
6. கிரியை
1451 |
பத்துத் திசையும் பரமொரு தெய்வமுண் டெத்திக் கிலரில்லை என்பதின் அமலர்க் கொத்துத் திருவடி நீழல் சரணெனத் தத்தும் வினைக்கடல் சாராது காணுமே. |
1 |
1452 |
கானுறு கோடி கடிகமழ் சந்தனம் வானுறு மாமல ரிட்டு வணங்கினும் ஊனினை நீக்கி உண்பவர்க் கல்லது தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே. |
2 |
1453 |
கோனக்கன் றாயே குரைகழல் ஏத்துமின் ஞானக்கன் றாகிய நடுவே யுழிதரும் வானக்கன் றாகிய வானவர் கைதொழு மானக்கன் றீசன் அருள்வள்ள மாமே. |
3 |
1454 |
இதுபணிந் தெண்டிசை மண்டிலம் எல்லாம் அதுபணி செய்கின் றவளொரு கூறன் இதுபணி மானுடர் செய்பணி யீசன் பதிபணி செய்வது பத்திமை காணே. |
4 |
1455 |
பத்தன் கிரியை சரியை பயில்வுற்றுச் சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில் உய்த்த நெறியுற் றுணர்கின்ற ஞானத்தாற் சித்தங் குருவரு ளாற்சிவ மாகுமே. |
5 |
1456 |
அன்பின் உருகுவ நாளும் பணிசெய்வன் செம்பொன்செய் மேனி கமலத் திருவடி முன்புநின் றாங்கே மொழிவ தெனக்கருள் என்பினுட் சோதி இலங்குகின் றானே. |
6 |
7. யோகம்
1457 |
நெறிவழி யேசென்று நேர்மையுள் ஒன்றித் தறியிருந் தாற்போல் தம்மை யிருத்திச் சொறியினுந் தாக்கினுந் துண்ணென் றுணராக் குறியறி வாளர்க்குக் கூடலு மாமே. |
1 |
1458 |
ஊழிதோ றூழிஉணர்ந்தவர்க் கல்லால் ஊழிதோ றூழி உணரவுந் தானொட்டான் ஆழி அமரும் அரியயன் என்றுளார் ஊழி முயன்றும் ஒருச்சியு ளானே. |
2 |
1459 |
பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோற் சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது ஓவியம் போல உணர்ந்தறி வாளர்க்கு நாவி யணைந்த நடுதறி யாமே. |
3 |
1460 |
உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர் கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச் சிந்தை யுறவே தெளிந்திருள் நீங்கினால் முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே. |
4 |
1461 |
எழுத்தோடு பாடலும் எண்ணெண் கலையும் பழித்தலைப் பாசப் பிறவியும் நீங்கா வழித்தலைச் சோமனோ டங்கி யருக்கன் வழித்தலைச் செய்யும் வகையுணர்ந் தேனே. |
5 |
1462 |
விரும்பிநின் றேசெயில் மேய்த்தவ ராகும் விரும்பிநின் றேசெயின் மெய்யுரை யாகும் விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ மாகும் விரும்பிநின் றேசெயில் விண்ணவ னாகுமே. |
6 |
1463 |
பேணிற் பிறவா உலகருள் செய்திடுங் காணில் தனது கலவியு ளேநிற்கும் நாணில் நகர நெறிக்கே வழிசெயும் ஊனிற் சுடுமங்கி யுத்தமன் றானே. |
7 |
1464 |
ஒத்தசெங் கோலார் உலப்பிலி மாதவர் எத்தனை யாயிரம் வீழ்ந்தனர் எண்ணிலி சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய் அத்த னிவனென்றே அன்புறு வார்களே. |
8 |
1465 |
யோகிக்கு யோகாதி மூன்றுள கொண்டுற்றோர் ஆகத் தருகிரி யாதி சரியையாந் தாகத்தை விட்ட சரியையொன் றாம்ஒன்றுள் ஆதித்தன் பத்தியுள் அன்புவைத் தேனே. |
9 |
1466 |
யோகச் சமயமே யோகம் பலவுன்னல் யோக விசேடமே அட்டாங்க யோகமாம் யோகநிர் வாணமே யுற்ற பரோதயம் யோக அபிடேகமே ஒண்சித்தி யுற்றலே. |
10 |
8. ஞானம்
1467 |
ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவா ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே. |
1 |
1468 |
சத்தமுஞ் சத்த மனனும் தகுமனம் உய்த்த வுணர்வு முணர்த்தும் அகந்தையுஞ் சித்தமென் றிம்மூன்றுஞ் சிந்திக்குஞ் செய்கையுஞ் சத்தங் கடந்தவர் பெற்றசன் மார்க்கமே. |
2 |
1469 |
தன்பால் உலகுந் தனக்கரு காவதும் அன்பா லெனக்கரு ளாவது மாவன என்பார்கள் ஞானமும் எய்துஞ் சிவோகமும் பின்பாலின் நேயமும் பெற்றிடுந் தானே. |
3 |
1470 |
இருக்குஞ் சேம இடம்பிரமமாகும் வருக்கஞ் சராசர மாகும் உலகந் தருக்கிய ஆசார மெல்லாந் தருமே திருக்கிலாஞானத்தைத் தேர்ந்துணர்ந் தோர்க்கே. |
4 |
1471 |
அறிவும் அடக்கமும் அன்பும் உடனே பிறியா நகர்மன்னும் பேரரு ளாளன் குறியுங் குணமுங் குரைகழல் நீங்கா நெறியறி வார்க்கிது நீர்த்தொனி யாமே. |
5 |
1472 |
ஞானம் விளைந்தெழு கின்றதோர் சிந்தையுள் ஏனம் விளைந்தெதி ரேகாண வழிதோறுங் கூனல் மதிமண் டலத்தெதிர் நீர்கண்டு ஊனம் அறுத்துநின் றொண்சுட ராகுமே. |
6 |
1473 |
ஞானிக் குடன்குண ஞானத்தில் நான்குமா மோனிக் கிவையொன்றுங் கூடாமுன் மோகித்து மேனிற்ற லாஞ்சத்தி வித்தை விளைத்திடுந் தானிக் குலத்தோர் சரியை கிரியையே. |
7 |
1474 |
ஞானத்தின் ஞானாதி நான்குமா ஞானிக்கு ஞானத்தின் ஞானமே நானென தென்னாமல் ஞானத்தில் யோகமே நாதாந்த நல்லொளி ஞானக் கிரியையே நன்முத்தி நாடலே. |
8 |
1475 |
நண்ணிய ஞானத்தின் ஞானாதி நண்ணுவோன் புண்ணிய பாவங் கடந்த பிணக்கற்றோன் கண்ணிய நேயங் கரைஞானங் கண்டுளோன் திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே. |
9 |
1476 |
ஞானச் சமயமே நாடுந் தனைக் காண்டல் ஞான விசேடமே நாடு பரோதய ஞானநிர் வாணமே நன்றறி வானருள் ஞானாபி டேகமே நற்குறு பாதமே. |
10 |
9. சன்மார்க்கம்
1477 |
சாற்றுஞ்சன் மார்க்கமாந் தற்சிவ தத்துவத் தோற்றங் களான சுருதிச் சுடர்கண்டு சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க் கூற்றத்தை வென்றார் குறிப்பறிந் தார்களே. |
1 |
1478 |
சைவப் பெருமைத் தனிநா யகன்நந்தி உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு தெய்வச் சிவநெறி நன்மார்க்கஞ் சேர்ந்துய்ய வையத்துள் ளார்க்கு வகுத்தவைத் தானே. |
2 |
1479 |
தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப் பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக் குருபத்தி செய்யுங் குவலயத் தோர்க்குத் தருமுத்திச் சார்பூட்டுஞ் சன்மார்க்கந் தானே. |
3 |
1480 |
தெளிவறி யாதார் சிவனை யறியார் தெளிவறி யாதார் சீவனு மாகார் தெளிவறி யாதார் சிவமாக மாட்டார் தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே. |
4 |
1481 |
தானவ னாகித் தானைந்தா மலஞ்செற்று மோனம தாம்மொழிப் பான்முத்த ராவது மீனமில் ஞானானு பூதியில் இன்பமுந் தாவை னாயுறலானசன் மார்க்கமே. |
5 |
1482 |
சன்மார்க்கத் தார்க்கு முகத்தொடு பீடமுஞ் சன்மார்க்கத் தார்க்கும் இடத்தொடு தெய்வமுஞ் சன்மார்க்கத் தார்க்கு வருக்கந் தரிசனம் எம்மார்க்கத் தார்க்கும் இயம்புவன் கேண்மினோ. |
6 |
1483 |
சன்மார்க்க சாதனந் தான்ஞான ஞேயமாம் பின்மார்க்க சாதனம் பேதையர்க்காய்நிற்கும் துன்மார்க்கம் விட்ட துரியத் துரிசற்றார் சன்மார்க்கந் தானவ னாகுஞ்சன் மார்க்கமே. |
7 |
1484 |
சன்மார்க்க மெய்த வருமருஞ் சீடர்க்குப் பின்மார்க்க மூன்றும் பெறவியல் பாமென்றால் நன்மார்க்கந் தானே சிவனொடு நாடலே சொன்மார்க்க மென்னச்சுருதிகைக்கொள்ளுமே. |
8 |
1485 |
அன்னிய பாசமும் ஆகுங் கருமமும் முன்னும் அவத்தையும் மூலப் பகுதியும் பின்னிய ஞானமும் பேதாதி பேதமுந் தன்னொடுங் கண்டவர் சன்மார்க்கத் தோரே. |
9 |
1486 |
பசுபாச நீக்கிப் பதியுடன் கூட்டிப் கசியாத நெஞ்சங் கசியக் கசிவித் தொசியாத வுண்மைச் சொரூபோ தயத்துற் றசைவான தில்லாமை யானசன் மார்க்கமே. |
10 |
1487 |
மார்க்கஞ்சன் மார்க்கிகள் கிட்ட வகுப்பது மார்க்கஞ்சன் மார்க்கமே யன்றிமற் றொன்றில்லை மார்க்கஞ்சன் மார்க்க மெனுநெறி வைகாதோர் மார்க்கஞ்சன் மார்க்க மாஞ்சித்த யோகமே. |
11 |
10. சகமார்க்கம்
1488 |
சன்மார்க்கந் தானே சகமார்க்க மானது மனமார்க்க மாமுத்தி சித்திக்குள் வைப்பதாம் பின்மார்க்க மானது பேராப் பிறந்திறந் துன்மார்க்க ஞானத் துறதியு மாமே. |
1 |
1489 |
மருவுந் துவாதச மார்க்கமில் லாதார் குருவுஞ் சிவனுஞ் சமயமுங் கூடாம் வெருவுந் திருமகள் வீட்டில்லை யாகும் உருவுங் கிளையும் ஒருங்கிழப் பாரே. |
2 |
1490 |
யோகச் சமாதியின் உள்ளே யகலிடம் யோகச் சமாதியின் உள்ளே யுளரொளி யோகச் சமாதியின் உள்ளே யுளசத்தி யோகச் சமாதி யுகந்தவர் சித்தரே. |
3 |
1491 |
யோகமும் போகமும் யோகியர்க் காகுமால் யோகஞ் சிவரூபம் உற்றிடும் உள்ளத்தோர் போகம் புவியிற் புருடார்த்த சித்திய தாகும் இரண்டும் அழியாத யோகிக்கே. |
4 |
1492 |
ஆதார சோதனை யானாடி சுத்திகள் மேதாதி யீரெண் கலாந்தத்து விண்ணொளி போதா லயத்துப் புலன்கர ணம்புந்தி சாதா ரணங்கெட லாஞ்ச மார்க்கமே. |
5 |
1493 |
பிணங்கிநிற் கின்றவை ஐந்தையும் பின்னை அணங்கி யெறிவ னயிர்மன வாளாற் கணம்பதி னெட்டுங் கருதும் ஒருவன் வணங்கவல் லான் சிந்தை வந்துநின் றானே. |
6 |
1494 |
வளங்கனி யொக்கும் வளநிறத் தார்க்கும் வளங்கனி யொப்பதோர் வாய்மைய னாகும் உளங்கனிந் துள்ள முகந்திருப் பார்க்குப் பழங்கனிந் துள்ளே பகுந்துநின் றானே. |
7 |
11. சற்புத்திர மார்க்கம்
1495 |
மேவிய சற்புத்திர மார்க்க மெய்த்தொழில் தாவிப்ப தாஞ்சக மார்க்கம் சகத்தொழில் ஆவ திரண்டும் அகன்று சகமார்க்கத் தேவியோ டொன்றல் சன்மார்க்கத் தெளிவதே. |
1 |
1496 |
பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல் ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை நேசித்திட் டன்னமும் நீசுத்தி செய்தன்மர் றாசற்ற சற்புத் திரமார்க்க மாகுமே. |
2 |
1497 |
அறுகாற் பறவை அலர்தேர்ந் துழலும் மறுகா நரையன்னந் தாமரை நீலங் குறுகா நறுமலர் கொய்வன கண்டுஞ் சிறுகால் அறநெறி சேர்கி லாரே. |
3 |
1498 |
அருங்கரை யாவது அவ்வடி நீழற் பெருங்கரை யாவது பிஞ்ஞக னாணை வருங்கரை யேகின்ற மன்னுயிர்க் கெல்லாம் ஒருங்கரை யாயுல கேழினொத் தானே. |
4 |
1499 |
உயர்ந்தும் பணிந்தும் முகந்துந் தழுவி வியந்தும் அரனடிக் கேமுறை செய்மின் பயந்தும் பிறவிப் பயனது வாகும் பயந்து பிரிக்கிலப் பான்மையு னாமே. |
5 |
1500 |
நின்றுதொழுவன் கிடந்தெம் பிரான்தன்னை என்றுந் தொழுவன் எழிற்பரஞ் சோதியைத் துன்று மலர்தூவித் தொழுமின் தொழுந்தோறுஞ் சென்று வெளிப்படுந் தேவர் பிரானே. |
6 |
1501 |
திருமன்னுஞ் சற்புத் திரமார்க்கச் சரியை உருமன்னி வாழும் உலகத்தீர்கேண்மின் கருமன்னு பாசங் கைகூம்பத் தொழுது இருமன்னு நாடோறும் இன்புற் றிருந்தே. |
7 |
12. தாச மார்க்கம்
1502 |
எளியனல் தீப மீடல்மலர் கொய்தல் அளிதின் மெழுக லதுதூர்த்தல் வாழ்த்தல் பளிமணி பற்றல் பன்மஞ் சனமாதி தளிதொழில் செய்வது தான்தாசமார்க்கமே. |
1 |
1503 |
அதுவிது வாதிப் பரமென் றகல்வர் இதுவழி யென்றங் கிறைஞ்சின ரில்லை விதிவழி யேசென்று வேந்தனை நாடு மதுவிது நெஞ்சில் தணிக்கின்ற வாறே. |
2 |
1504 |
அந்திப்பன் திங்க ளதன்பின்பு ஞாயிறு சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல் வந்திப்ப வானவர் தேவனை நாடோறும் வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்ததே. |
3 |
1505 |
அண்ணலை வானவர் ஆயிரம் பேர்சொல்லி உன்னுவர் உள்மகிழ்ந்துண்ணின் றடிதொழக் கண்ணவ னென்று கருது மவர்கட்குப் பண்ணவன் பேரன்பு பற்றிநின் றானே. |
4 |
1506 |
வாசித்தும் பூசித்தும்மாமலர் கொய்திட்டும் பாசிக் குளத்தில்வீழ் கல்லா மனம்பார்க்கின் மாசற்ற சோதி மணிமிடற் றாண்ணலை நேசத் திருந்த நினைவறி யாரே. |
5 |
13. சாலோகம்
1507 |
சாலோக மாதி சரியாதி யிற்பெறுஞ் சாலோகஞ் சாமீபந் தங்குஞ் சரியையால் மாலோகஞ் சேரில் வழியாகுஞ் சாரூபம் பாலோகம் இல்லாப் பரனுரு வாமே. |
1 |
1508 |
சமயங் கிரியையிற் றன்மனங் கோயில் சமய மனுமுறை தானே விசேடஞ் சமயத்து மூலந் தனைத்தேறன் மூன்றாஞ் சமயாபி டேகந் தானாஞ் சமாதியே. |
2 |
14. சாமீபம்
1509 |
பாசம் பசுவான தாகும்இச் சாலோகம் பாச மருளான தாகும்இச் சாமீபம் பாசஞ் சிரமான தாகும்இச் சாரூபம் பாசங் கரைபதி சாயுச் சியமே. |
1 |
15. சாரூபம்
1510 |
தங்கிய சாரூபந் தானெட்டாம் யோகமாந் தங்குஞ்சன்மார்க்கந் தனிலன்றிக் கைகூடா அங்கத் துடல்சித்தி சாதன ராகுவர் இங்கிவ ராக விழிவற்ற யோகமே. |
1 |
1511 |
சயிலலோ கத்தினைச் சார்ந்த பொழுதே சயிலம தாகுஞ் சராசரம் போலப் பயிலுங் குருவின் பதிபுக்க போதே கயிலை இறைவன் கதிர்வடி வாமே. |
2 |
16. சாயுச்சியம்
1512 |
சைவஞ் சிவனுடன் சம்பந்த மாவது சைவந் தனையறிந் தேசிவஞ் சாருதல் சைவஞ் சிவந்தன்னைச் சாராமல் நீங்குதல் சைவஞ் சிவானந்தஞ் சாயுச் சியமே. |
1 |
1513 |
சாயுச் சியஞ்சாக் கிராதீதஞ் சாருதல் சாயுச் சியமுப சாந்தத்துத் தங்குதற் சாயுச் சியஞ்சிவ மாதல் முடிவிலாச் சாயுச் சியமனத் தானந்த சத்தியே. |
2 |
17. சத்திநிபாதம்
மந்தம்
1514 |
இருட்டறை மூலை யிருந்த கிழவி குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக் குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி மருட்டி யவனை மணம்புரிந் தாளே. |
1 |
1515 |
தீம்புல னான திசையது சிந்திக்கில் ஆம்புல னாயறிவார்க்கமு தாய்நிற்குந் தேம்புல னான தெளிவறி வார்கட்குக் கோம்புல னாடிய கொல்லையு மாமே. |
2 |
1516 |
இருள்நீக்கி எண்ணில் பிறவி கடத்தி அருள்நீங்கா வண்ணமே யாதியருளும் மருள்நீங்கா வானவர் கோனொடுங் கூடிப் பொருள்நீங்கா இன்பம் புலம்பயல் தானே. |
3 |
1517 |
இருள்சூ ழறையில் இருந்தது நாடிற் பொருள்சூழ் விளக்கது புக்கெரிந் தாற்போன் மருள்சூழ் மயக்கத்து மாமலர் நந்தி அருள்சூழ் இறைவனும் அம்மையு மாமே. |
4 |
மந்ததரம்
1518 |
மருட்டிப் புணர்ந்து மயக்கமும் நீக்கி வெருட்டி வினையறுத் தின்பம் விளைத்துக் குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி அருட்டிகழ் ஞான மதுபுரிந் தானே. |
5 |
1519 |
கன்னித் துறைபடிந் தாடிய ஆடவர் கன்னித் துறைபடிந் தாடுங் கருத்திலர் கன்னித் துறைபடிந் தாடுங் கருத்துண்டேற் பின்னைப் பிறவி பிறிதில்லை தானே. |
6 |
1520 |
செய்யன் கரியன் வெளியன் நற் பச்சையன் எய்த வுணர்ந்தவர் எய்வர் இறைவனை மைவென் றகன்ற பகடுரி போர்த்தவெங் கைய னிவனென்று காதல்செய் வீரே. |
7 |
1521 |
எய்திய காலங்கள் எத்தனை யாயினுந் தையலுந் தானுந் தனிநா யகமென்பர் வைகலுந் தன்னை வணங்கு மவர்கட்குக் கையிற் கருமஞ்செய் காட்டது வாமே. |
8 |
1522 |
கண்டுகொண்டோமிரண்டுந்தொடர்ந் தாங்கொளி பண்டுபண் டோயும் பரமன் பரஞ்சுடர் வண்டுகொண் டாடு மலர்வார் சடையண்ணல் நின்றுகண் டார்க்கிருள் நீக்கிநின் றானே. |
9 |
தீவிரம்
1523 |
அண்ணிக்கும் பெண்பிள்ளை அப்பனார் தோட்டத்தில் எண்ணிக்கும் ஏழேழ் பிறவி யுணர்விக்கும் உண்ணிற்ப தெல்லாம் ஒழிய முதல்வனைக் கண்ணுற்று நின்ற கனியது வாகுமே. |
10 |
1524 |
பிறப்பை யறுக்கும் பெருந்தவம் நல்கும் மறப்பை யறுக்கும் வழிபட வைக்குங் குறப்பெண் குவிமுலை கோமள வல்லி சிறப்பொடு பூசனை செய்யநின் றார்க்கே. |
11 |
1525 |
தாங்குமின் எட்டுத் திசைக்குந் தலைமகன் பூங்கமழ் கோதைப் புரிகுழ லாளொடும் ஆங்கது சேரும் அறிவுடை யார்கட்குத் தூங்கொளி நீலந் தொடர்தலு மாமே. |
12 |
1526 |
நணுகினு ஞானக் கொழுந்தொன்று நல்கும் பணிகிலும் பன்மலர் தூவிப் பணிவன் அணுகிய தொன்றறி யாத வொருவன் அணுகும் உலகெங்கு மாவியு மாமே. |
13 |
தீவிரதரம்
1527 |
இருவினை நேரொப்பில் இன்னருட் சத்தி குருவென வந்து குணம்பல நீக்கித் தருமெனு ஞானத்தால் தன்செய லற்றால் திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே. |
14 |
1528 |
இரவும் பகலும் இலாத இடத்தே குரவஞ் செய்கின்ற குழலியை உன்னி அரவஞ்செய் யாமல் அவளுடன் சேரப் பரிவொன்றி லாளும் பராபரை தானே. |
15 |
1529 |
மாலை விளக்கும் மதியமும் ஞாயிறுஞ் சாலை விளக்குந் தனிச்சுடர் அண்ணலுள் ஞானம் விளக்கிய நாதன்என் உள்புகுந்(து) ஊனை விளக்கி யுடனிருந் தானே. |
16 |
18. அருசமயப் பிணக்கம்
1530 |
ஆயத்துள் நின்ற அறுசம யங்களுங் காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலர் மாயக் குழியில் விழுவர் மனைமக்கள் பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே. |
1 |
1531 |
உள்ளத்து ளேதான் கரந்தெங்கும் நின்றவன் வள்ளல் தலைவன் மலருறை மாதவன் பொள்ளற் குரம்பைப் புகுந்து புறப்படுங் கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே. |
2 |
1532 |
உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க் குள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க் குள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே. |
3 |
1533 |
ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர் ஆறு சமயப் பொருளும் அவனலன் தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின் மாறுதல் இன்றி மனைபுக லாமே. |
4 |
1534 |
சிவமல்ல தில்லை யறையே சிவமாந் தவமல்ல தில்லை தலைப்படு வார்க்கிங்(கு) அவமல்ல தில்லை அறுசம யங்கள் தவம்வல்ல நந்திதாள் சார்ந்துய்யு நீரே. |
5 |
1535 |
அண்ணலை நாடிய ஆறு சமயமும் விண்ணவ ராக மிகவும் விரும்பியே முண்ணின் றழியு முயன்றில ராதலான் மண்ணின் றொழியும் வகையறி யார்களே. |
6 |
1536 |
சிவகதி யேகதி மற்றுள்ள எல்லாம் பவகதி பாசப் பிறவியொன் றுண்டு தவகதி தன்னொடு நேரொன்று தோன்றில் அவகதி மூவரும் அவ்வகை யாமே. |
7 |
1537 |
நூறு சமயம் உளவா நுவலுங்கால் ஆறு சமயமவ் ஆறுட் படுவன கூறு சமயங்கன் கொண்டநெறிநில்லா ஈறு பரநெறி யில்லா நெறியன்றே. |
8 |
1538 |
கத்துங் கழுதைகள் போலுங் கலதிகள் சுத்த சிவமெங்குந் தோய்வற்று நிற்கின்றான் குற்றம் தெளியார் குணங்கொண்டு கோதாட்டிப் பித்தேறி நாளும் பிறந்திறப் பாரே. |
9 |
1539 |
மயங்குகின் றாரு மதிதெளிந் தாரும் முயங்கி யிருவினை முழைமுகப் பாச்சி இயங்கிப் பெறுவரே லீறது காட்டிற் பயங்கெட் டவர்க்கோர் பரநெறி யாமே. |
10 |
1540 |
சேயன் அணியன் பிணியிலன் பேர்நந்தி தூயன் துளக்கற நோக்கவல் லார்கட்கு மாயன் மயக்கிய மானுட ராமவர் காயம் விளைக்குங் கருத்தறி யார்களே. |
11 |
1541 |
வழியரண் டுக்குமோர் வித்தது வான பழியது பார்மிசை வாழ்தல் உறுதல் சுழியறி வாளன்றன் சொல்வழி முன்னின் றழிவழி வார்நெறி நாடநில் லாரே. |
12 |
1542 |
மாதவர் எல்லாம் மாதேவன் பிரான்என்பர் நாதம தாக அறியப்படுநந்தி பேதஞ்செய் யாதே பிரான்என்று கைதொழில் ஆதியும் அந்நெறி யாகிநின் றானே. |
13 |
1543 |
அரநெறி யப்பனை யாதிப் பிரானை உரநெறி யாகி யுளம்புகுந் தானைப் பரநெறி தேடிய பத்தர்கள் சித்தம் பரனெறி யாவிடிற் பல்வகைத் தூரமே. |
14 |
1544 |
பரிசறி வானவன் பண்பன் பகலோன் பெரிசறி வானவர் பேற்றில் திகழுந் துரிசற நீநினை தூய்மணி வண்ணன் அரிதவன் வைத்த அறநெறி தானே. |
15 |
1545 |
ஆன சமயம் அதுஇது நன்றெனும் மாய மனிதர் மயக்க மதுவொழி கானங் கடந்த கடவுளை நாடுமின் ஊனங் கடந்த வுருவது வாமே. |
16 |
1546 |
அந்நெறி நாடி அமரரு முனிவருஞ் செந்நெறி கண்டார் சிவனெனப் பெற்றார்பின் முன்னெறி நாடி முதல்வன் அருளிலார் சென்னெறி செல்லார் திகைக்கின்ற வாறே. |
17 |
1547 |
உறுமா றறிவதும் உள்நின்ற சோதி பெறுமா றறியிற் பிணக்கொன்றும் இல்லை அறுமா றதுவான வங்கியு ளாங்கே இறுமா றறிகிலர் ஏழைகள் தாமே. |
18 |
1548 |
வழிநடக் கும்பரி சொன்றுண்டு வையங் கழிநடக் குண்டவர் கற்பனை கேட்பர் சுழிநடக் குந்துய ரம்மது நீக்கிப் பழிநடப் பார்க்குப் பரவலு மாமே. |
19 |
1549 |
வழிசென்ற மாதவம் வைகின்ற போது பழிசெல்லும் வல்வினைப் பற்றறுத் தாங்கே வழிசெல்லும் வல்வினை யாம்திறம் விட்டிட் டுழிசெல்லில் உம்பர் தலைவன்முன் னாமே. |
20 |
19. நிராசாரம்
1550 |
இமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி யமையறிந் தோமென்ப ராதிப் பிரானுங் கமையறிந் தாருட் கலந்துநின் றானே. |
1 |
1551 |
பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி தாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர் நீங்கிய வண்ணம் நினைவுசெய் யாதவர் ஏங்கி உலகில் இருந்தழு வாரே. |
2 |
1552 |
இருந்தழு வாரும் இயல்புகெ ட்டாரும் அருந்தவ மேற்கொண்டங் கண்ணலை எண்ணில் வருந்தா வகைசெய்து வானவர் கோனும் பெருந்தன்மை நல்கும் பிறப்பில்லை தானே. |
3 |
1553 |
தூரறி வாளர் துணைவர் நினைப்பிலர் பாரறி வாளர் படுபயன் றானுண்பர் காரறி வாளர் கலந்து பிறப்பர்கள் நீரறி வார்நெடு மாமுகி லாமே. |
4 |
1554 |
அறிவுடன் கூடி அழைத்தோர் தோணி பறியுடன் பாரம் பழம்பதி சிந்துங் குறியது கண்டுங் கொடுவினை யாளர் செறிய நினைக்கிலர் சேவடி தானே. |
5 |
1555 |
மன்னும் ஒருவன் மருவு மனோமயன் என்னின் மனிதர் இகழ்வரிவ் வேழைகள் துன்னி மனமே தொழுமின் துணையிலி தன்னையும் அங்கே தலைப்பட லாமே. |
6 |
1556 |
ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற் றாங்கார மற்ற அனுபவங் கைகூடார் சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார் நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே. |
7 |
20. உட்சமயம்
1557 |
இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம் அமைய வகுத்தவன் ஆதி புராணன் சமயங்க ளாறும்தன் றாளிணை நாட அமையங் குழல்கின்ற ஆதிப் பிரானே. |
1 |
1558 |
ஒன்றது பேரூர் வழியா றதற்கு என்றது போல இருமுச் சமயமும் நன்றிது தீதிது என்றுரை யாளர்கள் குன்று குரைத்தெழு நாயையொத் தார்களே. |
2 |
1559 |
சைவப் பெருமைத் தனிநா யகன்தன்னை உய்ய வுயிர்க்கின்ற ஒண்சுடர் நந்தியை மெய்ய பெருமையர்க் கன்பனை இன்பஞ்செய் வையத் தலைவனை வந்தடைந் துயமினே. |
2 |
1560 |
சிவனவன் வைத்ததோர் தெய்வ நெறியிற் பவனவன் வைத்த பழிவழி நாடி இவனவன் என்ப தறியவல் லார்கட் கவனவ னங்குள தாங்கட னாமே. |
3 |
1561 |
ஆமா றுரைக்கும் அறுசம யாதிக்குப் போமாறு தானில்லை புண்ணிய மல்லதங் காமாம் வழியாக்கும் அவ்வே றுயிர்கட்கும் போமா றவ்வாதாரப் பூங்கொடி யாளே. |
4 |
1562 |
அரன்நெறி யாவ தறிந்தேனும் நானுஞ் சிலநெறி தேடித் திரிந்தஅந் நாளும் உரநெறி யுள்ளக் கடல்கடந் தேறுந் தரநெறி நின்ற தனிச்சுடர் தானே. |
5 |
1563 |
தேர்ந்த அரனை அடைந்த சிவநெறி பேர்ந்தவர் உன்னிப் பெயர்ந்த பெருவழி ஆர்ந்தவர் அண்டத்துப் புக்க அருள்நெறி போந்து புனைந்து புணர்நெறி யாமே. |
6 |
1564 |
ஈரு மனத்தை யிரண்டற வீசுமின் ஊருஞ் சகாரத்தை ஓதுமின் னோதியே வாரு மரநெறி மன்னியே முன்னியத் தூருஞ் சுடரொளி தோன்றலு மாமே 7 |
1565 |
மினற்குறி யாளனை வேதியர் வேதத் தனற்குறி யாளனை ஆதிப் பிரான்தன்னை நினைக்குறி யாளனை ஞானக் கொழுந்தி னயக்குறி காணில் அரநெறி யாமே. |
8 |
1566 |
ஆய்ந்துண ரார்களின் ஆன்மாச் சதுர்பல வாய்ந்துண ராவகை நின்ற அரனெறி பாய்ந்துணர் வார் அரன் சேவடி கைதொழு தேய்ந்துணர் செய்வதோர் இன்பமு மாமே. |
9 |
1567 |
சைவ சமயத் தனிநா யகன்நந்தி உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு தெய்வச் சிவநெறி சன்மார்க்கஞ் சேர்ந்துய்ய வையத் துளார்க்குவகுத்துவைத் தானே. |
10 |
1568 |
இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும் பித்தரைக் காணின் நகுமெங்கள் பேர்நந்தி எத்தவ மாகிலென் எங்குப் பிறக்கிலென் ஒத்துணர் வார்க்கொல்லை யூர்புக லாமே. |
11 |
1569 |
ஆமே பிரான்முகம் ஐந்தொடு மாருயிர் ஆமே பிரானுக் கதோமுக மாறுள தாமே பிரானுக்குந் தன்சிர மாலைக்கும் நாமே பிரானுக்கு நரரியல் பாமே. |
12 |
1570 |
ஆதிப்பிரானுல கேழும் அளந்தவன் ஓதக் கடலும் உயிர்களு மாய்நிற்கும் பேதிப் பிலாமையின் நின்ற பராசத்தி ஆதிக்கட் டெய்வமும் அந்தமு மாமே. |
13 |
1571 |
ஆய்ந்தறி வார்கள் அமரர்வித் தியாதரர் ஆய்ந்தறி யாவண்ணம் நின்ற அரனெறி ஆய்ந்தறிந் தேனவன் சேவடி கைதொழ ஆய்ந்தறிந் தேனிம்மை அம்மைகண் டேனே. |
14 |
1572 |
அறியவொண் ணாதவ் வுடம்பின் பயனை அறியவொண் ணாத அறுவகை யாக்கி அறியவொண் ணாத அறுவகைக் கோசத் தறியவொண் ணாததோர் அண்டம் பதிந்ததே. |
15 |
ஐந்தாம் தந்திரம் முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்தாம் தந்திரம் - பத்தாம் திருமுறை - திருமந்திரம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - மார்க்கமே, ஞானத்தின், வானவர், சாயுச், சித்தாந்த, பராபரை, தெளிவறி, சன்மார்க்கத், வேதாந்த, சமயமும், சென்றணு, விரும்பிநின், கண்டங்கள், கண்டோர், கண்டவர், மார்க்க, மார்க்கஞ்சன், ஒருவன், சமாதியின், தார்க்கும், பின்மார்க்க, மார்க்கம், கன்னித், தில்லை, பரநெறி, மனிதர், அறியவொண், யார்களே, நல்கும், தாகும்இச், குணம்பல, துறைபடிந், சாரூபம், அறநெறி, உய்த்த, சுத்தம், தானென்று, சன்மார்க்க, சாதனந், திருவடி, ஒன்பதுங், சாதனம், மாகும், கிரியை, தார்களே, சிவநெறி, சன்மார்க்கந், சத்தும், நாளும், யாகும், எல்லாம், யாதார்