நற்றிணை - 292. குறிஞ்சி
நெடுந் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த பசுங் கேழ் இலைய நறுங் கொடித் தமாலம் தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும், யாணர் வைப்பின், கானம் என்னாய்; களிறு பொரக் கரைந்த கயவாய்க் குண்டு கரை |
5 |
ஒளிறு வான் பளிங்கொடு செம் பொன் மின்னும் கருங் கற் கான்யாற்று அருஞ் சுழி வழங்கும் கராஅம் பேணாய்; இரவரின், வாழேன்- ஐய!- மை கூர் பனியே! |
ஐயனே! நெடிய கணுக்களையுடைய சந்தன மரத்தின் அசைகின்ற கிளையிலே சுற்றிய பசிய நிறம் பொருந்திய இலையையுடைய நறிய தமாலக் கொடியை; இனிய தேனெடுக்கும் வேடர் வளைத்து அறுத்துக்கொண்டு செல்லாநிற்கும் புதுவருவாய் மிக்க இடத்தினையுடைய கானமென்று கருதாயாகி; யானைகள் ஒன்றோடொன்று போர் செய்தலாலே இடிந்தொழிந்த பெரிய பள்ளங்கள் பொருந்திய ஆழ்ந்த கரையிடமெல்லாம் வெள்ளிய பளிங்குக் கற்களும் சிவந்த பொன்னும் மின்னாநிற்கும்; கரிய கற்பாறையில் ஓடுகின்ற கான்யாற்றில் நீந்துதற்கரிய நீர்ச் சுழியையுடைய இடந்தோறும்; முதலைகள் இயங்காநிற்கும்; இத்தகைய ஏதங்களை நினையாயாகி இரவின்கண்ணே நீ இங்கு வரின் யான் இனி உயிர் வாழ்ந்திரேன்; இந்த இருள் நிரம்பிய பனிக்காலத்திலே தனித்தும் உயிர் வாழ்ந்திரேன்: ஆதலின் இதனை ஆராய்ந்து ஒன்றனை இன்னே செய்வாயாக!
இரவுக்குறி மறுத்தது. - நல்வேட்டனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 290 | 291 | 292 | 293 | 294 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வாழ்ந்திரேன், உயிர், பொருந்திய