முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » ஒரே சமயத்தில் புயலும் தென்றலும்
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - ஒரே சமயத்தில் புயலும் தென்றலும்
ஒரே நேரத்தில் ஒரே இடத்திலிருந்து புயலும் தென்றலும் ஒருங்கே வீச முடியுமா? பருவநிலை நியதிகளின் படி அது முடியாமல் இருக்கலாம். ஆனால், அரசியலில் - அதுவும் சர்வதேச அரசியலில் இவையெல்லாம் முடியாத காரியமல்ல.
இந்தியா - பாகிஸ்தான் பிரச்சினைகள் குறித்து இஸ்லாமாபாத்தில் இருந்து வெளியாகிய இருவேறு விதமான கருத்துகள் இதற்கு எடுத்துக்காட்டு. பிரதமர் ஜபருல்லா கான் ஜமாலியின் குழைந்த குரலும் நளினமான வார்த்தைகளும் - அதே சமயத்தில் ஜெனரல் முஷாரஃபின் அதிரடிப் பேச்சும் ஒரே சமயத்தில் வெளியாகியுள்ளன. இந்தியா மாபெரும் நாடு. வாஜ்பேயி பெருந்தலைவர். எனக்கு மூத்தவர். அவர் ஆணையிட்டால் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் அவரைச் சந்தித்துப் பேசச் சித்தமாக இருக்கிறேன் என்று ஜமாலி நாடக வசனம் பேசி முடிப்பதற்குள்ளாகவே, முஷாரஃப் அவருடைய பழைய கரடு முரடான பாணியில் காஷ்மீர் குறித்து வார்த்தைகளைத் தெளித்திருக்கிறார். காஷ்மீரில் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுப் பகுதியில் போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் தயார். ஆனால், ஒரு நிபந்தனை. இந்தியா - அதன் தரப்பில் காஷ்மீர்ப் பள்ளத்தாக்குப் பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும். அதோடு, அந்த வட்டாரத்தில் ராணுவ பலத்தையும் குறைக்க வேண்டும் என்று முஷாரஃப் கூறியிருக்கிறார்.
இந்தியாவிலிருந்து இஸ்லாமாபாத்துக்குச் சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்களைக் கொண்ட தூதுக் குழுவினரிடம் பேசியபோது நிபந்தனையுடன் கூடிய போர்நிறுத்தத் திட்டத்தை முஷாரஃப் வெளியிட்டிருக்கிறார்.
இம்மாதிரியான யோசனை இஸ்லாமாபாத்திலிருந்து வந்திருப்பதில் ஒரேயடியாகப் புதுமையில்லை. எனினும் காஷ்மீர்ப் பள்ளத்தாக்கின் நிலவரங்களுக்கு ஏற்ப - எல்லைக் கோட்டில் போர்நிறுத்தத்தை அமல்படுத்த பாகிஸ்தான் தயார் என்று முஷாரஃப் கூறியிருப்பது உண்மையிலேயே புதிய கருத்தே ஆகும்.
இதன் மூலம் முஷாரஃப் தன்னையும் அறியாமலே ஓர் உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார். பாகிஸ்தான் நினைத்தால் எல்லைதாண்டிய பயங்கரவாதத்துக்கு ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைக்க முடியும். அதற்கு, ஒரு நிபந்தனையை விதிக்கிறார் - அவ்வளவுதான்.
இவ்வளவுகாலம் பாகிஸ்தான் தரப்பில் இப்பிரச்சினையில் பன்னிப்பன்னிக் கூறப்பட்டு வந்த கருத்து என்ன தெரியுமா? கட்டுப்பாட்டு எல்லைக்கோடு வளைவுகளும் மலைகளும் காடுகளும் நிறைந்த பகுதி. அப்படியிருக்க, எல்லைக்கோடு முழுவதையும் கண்காணிப்பது என்பது மனித சக்தியால் முடியக்கூடிய காரியமல்ல. ஆங்காங்கு பிசிறுகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கில்லை - என்றே பாகிஸ்தான் இதுவரை வியாக்கியானம் செய்து வந்துள்ளது. ஆனால் இப்பொழுதோ காஷ்மீர்ப் பகுதி நிலவரங்களுடன் போர்நிறுத்தத்தை முடிச்சு போடும் அளவுக்கு வந்திருக்கிறது. இதன் மூலம், முஷாரஃப் மனம் வைத்தால் எல்லைதாண்டிய பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் - என்பது தெளிவாகியிருக்கிறது.
இந்த உண்மையை நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் முஷாரஃபின் கவனத்துக்குக் கொண்டு சென்ற போது அவர் சுதாரித்துக் கொண்டு நழுவியிருக்கிறார். அதன் பிறகு, அவருக்குப் பிடித்தமான காஷ்மீர்ப் பல்லவியைப் பாடியிருக்கிறார். காஷ்மீரில் நடைபெற்றுவருவது சுதந்திரப்போராட்டமே என்று வர்ணித்து மகிழ்ந்திருக்கிறார். இதிலிருந்து காஷ்மீர்ப் பிரச்சினையில் தெளிவற்ற குழப்ப நிலையில் சிக்கிக்கொண்டு அவர் தவித்து வருவது நன்கு புலனாகிறது.
முஷாரஃப் வாயை மூடுவதற்குள்ளாகவே அவருடைய போர் நிறுத்த யோசனையில் புதுமை ஏதும் இல்லை என்று தில்லியில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வழித்தெறிந்திருக்கிறார். மறுப்பதில் எதற்காக இவ்வளவு படபடப்புக் காட்டவேண்டும். ஆற அமர பரிசீலனை செய்த பிறகு, அசைக்க முடியாத தர்க்க வாதத்தினால் முஷாரஃபின் யோசனையை பிசுபிசுக்க வைத்திருக்கலாம். அதுவே சரியான ராஜதந்திரப் பாணி.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒரே சமயத்தில் புயலும் தென்றலும் - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - முஷாரஃப், பாகிஸ்தான், காஷ்மீர்ப், வைக்க, அவர், முஷாரஃபின், இந்தியா